WEB BLOG
this site the web

நம்மில் இருந்து தொடங்கட்டும்.. இந்த தீபொறி

உண்மையை வெளியே எடுத்து சொல்ல வேண்டிய வெகு ஜன ஊடகங்கள் விலை போய் விட்ட கொடுமை. உலக தமிழர்களின் தலைவர் என்று சொல்லப்பட்ட கிழவர் பதவி சுகத்திற்கு எதை வேண்டும் என்றாலும் காவு கொடுக்க தயாராக இருக்கிற சூழ்நிலையில் எதை தின்றால் பித்தம் தெளியும்? என்ற நிலை நம்மில் பலருக்கு.

தலைவன் இல்லாத இனமாகவே தமிழினம் இப்போது தத்தளிப்பதாக எனக்கு தோன்றுகிறது. மன்னிக்கவும்.. சொல்லவே நா கூசுகிறது. தமிழக தமிழரில் பலருக்கு இதை பற்றிய கவலையோ, அல்லது அறிந்து கொள்ள வேண்டிய ஆர்வமோ இல்லை. ஸ்ரீலங்கா கொடுமை நினைத்து என்னை போன்று தூக்கம் இழந்தவர் வெகு சிலர். இலவச தொலைகாட்சி தொடர்களிலும், ஆபாச நடன நாடியங்களிலும் தங்களை தொலைத்து விட்டதாகவே நான் கருதுகிறேன்.

சில நாட்களாக வலை பூக்களில் வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியை உண்டு பண்ண கூடியதாக இருக்கிறது. தமிழக தொலைகாட்சிகளோ, பத்திரிகைகளோ இதை கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

இங்குள்ள கவிஞர்களில் பல பேருக்கு காசின் மேல் இருக்கும் அக்கறை தம் இனத்தின் மேல் இல்லை. ஒன்றிரண்டு கவிதை எழுதி ஒப்பாரி வைத்ததோடு சரி. கல்லறை போகும் வரை காசு வேணும் என்று பாடிய கவிஞர்கள வாழும் நாடு இது.

இன்று தமிழ் வலை பூக்களுக்கு இருக்கும் வட்டம் பெரிது. தூங்கி கொண்டு இருக்கும் தமிழினத்தை எழுப்பும் பொறுப்பு நமது. உண்ண உணவின்றி, மறைக்க துணியின்றி, அன்னை இன்றி, அப்பன் இன்றி, உறவு இன்றி நம்மையே எல்லாமுமாய் நினைத்து, அங்கே ஏங்கி கொண்டு இருக்கும் மூன்று லட்சம் தமிழர்களுக்கும் தோள் கொடுப்பது நமது கடமை. சீக்கியன் ஒருவனின் மயிரை அறுத்த காரணத்திற்காக அந்த இனம் விதியில் இரங்கி போராடியது நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம். தமிழனின் உயிர் அறுத்தும் அமைதியாக நிற்கிறது என் தேசம். விழிப்புணர்வு உங்கள் வீட்டில் இருந்து தொடங்கட்டும். நம்மில் பலரின் வீட்டில் இருப்பவர்களுக்கு கூட இந்த கொடுமைகளின் ஆழம் புரிந்து இருக்க வில்லை. நம்மால் ஒரு பத்து பேருக்கு இதை பற்றிய அறிவுட்டலை செய்தால் போதும். தீ பொறி நம்மில் இருந்து தொடங்கட்டும். இதை செய்ய தவறும் வேளையில், தமிழின அழிவுக்கு நாமும் துணை ஆகிவிட்ட பாவத்துக்கு ஆளாவோம்.


http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1251539986&archive=&start_from=&ucat=15&

தமிழனுக்கு எதுக்கு மதம்?

"உங்களுக்கு இயேசு மேல நம்பிக்கை உண்டா?" என்ற குரல் கேட்டு சாளரத்தின் மேல இருந்த பார்வையை விலக்கி அந்த பெரியவரை பார்த்தேன். என்னைத்தான் கேட்டு கொண்டு இருந்தார். சென்னை-ல் இருந்து திருச்செந்தூர் சென்று கொண்டு இருந்த ரயில் அது. என் மனைவி "சின்ன மைனாவை"* தூங்க வைக்க போராடி கொண்டு இருந்தாள். என்னை பார்த்து இந்த கேள்வி கேட்க பட்டதும் சிரிக்க முற்பட்டாள். கேள்வி கேட்ட பெரியவரை பார்த்தேன். அறுபது வயதுக்கு மேலே இருக்கும் அவர் கையில் பெரிய பைபிள் ஒன்று இருந்தது. பேசும் மன நிலையில் நான் இல்லை.

"இல்லைங்க. நான் கடவுள் மறுப்பு கொள்கையை கடை புடிப்பவன்"

" ஒ!! அப்படியா செய்தி. உங்க மாதிரி ஆட்களைத்தான் இயேசு ராசா முதலில் ரட்சிக்கிறார் தெரியுமா? "

" இவரு ரொம்ப நேரமா இப்படித்தான் எல்லோரையும் கேட்டு தொல்லை பண்ணுகிறார்" என்றாள் என் மனைவி முணுமுணுப்பாக. நான் வெளியே வேடிக்கை பார்க்க போய் இருந்த சமயம் அவர் இது பற்றி எல்லோரிடமும் பேசி இருக்க கூடும் என்று நினைத்து கொண்டேன்.

"தம்பி உங்களைதான் கேக்குறேன் .. அப்படி எல்லாம் இருக்கிறது தப்பு தெரியுமா?"

பெருசுக்கு நேரம் சரி இல்லை. சொந்த செலவில் செய் வினை வைத்து கொள்கிறார் என்று நினைத்து கொண்டேன்.

" நம்ம இத பத்தி ரொம்ப நேரம் விவாதம் பண்ண வேண்டி இருக்கு. அப்புறம் நீங்க என்னோட கட்சி மாற வேண்டி இருக்கும்.. சரியா?" என்றேன்.

" இல்ல இயேசு ராஜா என்ன சொல்லுகிறார் என்றால்...."

"நிறுத்துங்க...நான் ரொம்ப கேள்வி கேக்க போறது இல்ல ... ஒரே ஒரு கேள்வி தான்..அதுக்கு மொத பத்தி சொல்லுங்க அப்புறம் பேசலாம்"

"என்ன?"

"நீங்க தமிழ் கிருத்தவர் தானே"

"ஆமாம்"

"இப்போ ஸ்ரீலங்கா -ல நடந்த போரில் ஏகப்பட்ட தமிழ் கிறித்துவர்கள் செத்து போய்டாங்க.. நெறைய தேவாலயம் இடிஞ்சு போச்சு..இன்னும் நிறைய கிருத்துவர்கள் சோத்துக்கு கஷ்ட படுறாங்க...புத்த மதம் இருக்குன்னு ஒரே காரணத்துக்காக சீனாகாரனும் ஜப்பான்காரனும் அவனுக்கு காசும், ஆயுதமும் கொட்டி கொடுத்தானே.. நீங்க உங்க ஆளுங்களுக்கு என்ன செஞ்சீங்க? நீங்களும் உங்க பேராயரும் மூச்சு விடலையே ஏன்..?"

அவரிடம் இருந்து பதிலே இல்லை.

"என்னன்னா அதனால ஒரு பிரயோசனுமும் இல்ல .. அப்படி பேசினா உங்களை தூக்கி ஜெயில்-எ போட்டிருவான். வாடிகன்ல அவங்களை தமிழ் ஆளா பார்த்தான். கிருத்துவனா இல்ல..அத நீங்க புரிஞ்சிக்கணும். முதல உங்களை நம்பி மதம் மாறுன சனத்துக்கு எதாவது பண்ண முடியுமான்னு பாருங்க.. அப்புறம் என்னை மாதிரி ஆளுங்க கிட்ட வரலாம்"

அவர் என்னிடம் பேச விரும்பவில்லை போலும். அவர் பைபிள்-ஐ திறந்து வைத்து கொண்டார். நான் இறங்கும் வரையில் என்னுடைய பார்வையை தவிர்த்தார். இறங்கும்போது இதை பத்தி சிந்திக்குமாறு சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

ஒரு கனவு !!!!

மணல் வெளியெங்கும்
காண கிடக்கின்றன
சவ குழிகள்.

வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கிறன
சமாதானத்திற்கான கொடியும்
அதை ஏந்தியவர் கரங்களும்.

புத்தர் மாதிரியொருவர்
போதி மரத்தை
வெட்டி கொண்டிருந்தார்.

தூரத்து பள்ளி கட்டிடமொன்றில்
இடிபாடுகிடையில் இறந்து கிடந்தன
இயல் இசை நாடகம் மூன்றும்.

சவகுழியில் இருந்து மீண்டும்
சத்தம் வரக்கூடுமென
இருவர் பேசி கொண்டனர்.

தூரத்தில் பிணதின்னி கழுகளோடு
பேச்சு வார்த்தை நடத்திகொண்டிருந்தது
என்தேசத்தின் இறையாண்மை

கால்கள் துவள
நடக்கிறேன் நான்.
நீண்டு கொண்டே செல்லும்
பாதை முடிவதாக இல்லை

இறந்து கிடந்த
தாயின் மார்பில் வழிந்த
ரத்தத்தை உறிஞ்சி குடிக்க
தொடங்கியது ஒரு குழந்தை

அலறியபடி கண் விழித்து
எழுந்தேன் நான்


கரடி பொம்மையை கட்டி
படுத்திருந்த என் குழநதை
தூக்கத்தில் சிரிக்க தொடங்கியது.

ஒரு சிலையும் உறை சிறையும்!!!



பெங்களூருவில் சுமார் பதினெட்டு ஆண்டுகள் மூடி வைக்கப்பட்டு இருக்கும் திருவள்ளுவர் சிலை அடுத்த மாதம், கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. - செய்தி.


"தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை." -திருவள்ளுவர்.


தமிழின காவலர் கலைஞருக்கு பெங்களூர்-ல் வசிக்கும் அவரது அருமை மகள் செல்வி நினைவு வந்து இருக்க கூடும். கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தியபோது "சந்தன" புகழ் வீரப்பனால் தனது கோரிக்கைகளில் ஒன்றாக வைக்கப்பட்ட இந்த வள்ளுவரின் சிறை மன்னிக்கவும் சிலை திறப்பு விழா, பெங்களூர் தமிழ் மக்களால் பலமுறை முயற்சி செய்தும் முடியாத நிலையில் தமிழரின் நலனுக்காகவும், தமிழுக்காகவும் தன்னை அர்ப்பணித்து கொண்ட (?), கலைஞர் அவர்களால் திறக்கப்படவிருக்கிறது. ஒரு வாரம் மகள் வீட்டில் ஓய்வு எடுத்த பின் விமான நிலையம் செல்லும் வழியில் இந்த சிலை திறப்பு விழா நடக்கவிருக்கிறது.


சிலை திறப்புக்கு பின் என்ன ஆகும்?:
இதுவரை காக்கை, குருவிகளின் கழிவுகளை தாங்கி வந்த சாக்கு அகற்றபடவிருப்பதால், இனி வள்ளுவர் தலை இனிமேல் அந்த பணியை சிரமேற்கொண்டு செய்ய தொடங்கும்.
அந்த இடத்தில இனி காவல் காக்க வேண்டிய அவசியம் (யாரும் சிலையை திறந்து விடாமல்(?)) பெங்களூர் காவல் துறைக்கு இல்லை.
பெங்களூர் தமிழ் சங்கத்துக்கு ரூபாய் ஐந்து லட்சம் வளர்ச்சி நிதியாக கிடைக்கும். அந்த நிதி இதே போல் கலைஞர் சிலை அமைக்க உதவும்(வேற எதுக்கு இந்த ஐந்து லட்சம்?).
இனி காவிரியில் தண்ணீர் கேட்டால் வாட்டால் நாகராஜன் கும்பல் சாணி அடிக்க இந்த சிலை உதவ கூடும்.கழக திமுக அரசின் சாதனையாக கலைஞர் அவர்களால் சட்ட சபையில் அறிவிக்க பயன்பட கூடும்.

என்ன கொடுமை சார் இது???. இதுக்கு அந்த சிலையே வைக்காமல் இருந்து இருக்கலாம். இதை விட வள்ளுவரை கேவல படுத்த முடியுமா என்ன?
 

W3C Validations

Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus. Morbi dapibus dolor sit amet metus suscipit iaculis. Quisque at nulla eu elit adipiscing tempor.

Usage Policies